மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ.5 இலட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்பினை கூத்தாநல்லூர் நண்பர்கள் குழு சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவாரூர், டிச. 10 –
தமிழ்நாட்டில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, தருவள்ளூர, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. அதில் குறிப்பிட்டு சொல்லும்படியாக பெருநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் புயலால் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக மக்கள் குடியிருப்புப் பகுதி, சாலைகள் போன்ற பல்வேறு பகுதிகளில் வெள்ள மழைநீர் சூழ்ந்து அவர்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைப் பாதிப்புக்குள்ளானது. இருப்பினும் அப் பேரிடரை எதிக்கொண்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைச்சார்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பேரிடர் ஏற்பட்டு ஒருவாரம் கடந்தும் இன்னும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடை உணவு மற்றும் குடிநீர் உட்பட அடிப்படைப் பொருட்கள் கிடைக்காது மிகவும் கடினமான நிலையினை எதிர் கொண்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுப்போன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் என பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையிலும், பேரிடர் காலத்தில் அரசுக்கு பக்கபலமாக நின்று பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அவர்களின் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் செயலிலும் வெகுச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள பாண்டுக்குடி ஊராட்சி மன்ற தலைவரும் முன்னாள் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நண்பர் குழு சார்பில் 1000 குடும்பங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை லாரி மூலம் கூததாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்வில் திமுக நகர் மன்ற உறுப்பினரும் நகர கழக பொருளாளரும் ஹாஜா நஜிமுதீன் வர்த்தக சங்க தலைவர் ரவிச்சந்திரன் , 8வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மாரியப்பன் 7வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பொன் பக்கிரி செல்வம் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





















