கும்மிடிப்பூண்டி, ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
ஆந்திர மாநிலம் இச்சாபுரத்திலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 32 கிலோ கஞ்சா கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் சிக்கியது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலம் இச்சாபுரத்தில் இருந்து வந்த லோடு லாரியை சோதனை செய்தபோது 13 பொட்டலங்களில் பிரத்யேக பையில் லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து லாரியின் டிரைவரான கோயம்புத்தூரைச் சேர்ந்த விவேக் (26), கிளீனரான திருச்சியை சேர்ந்த முகமது அசாருதீன் (35) ஆகிய 2 பேரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சாவை கடத்தி வந்து கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுவிலக்கு மற்றும் போதை தடுப்பு பிரிவு ஆய்வாளர் பத்மாவதி லாரி ஓட்டுநர் விவேக் மற்றும் கிளீனர் அசாருதீன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.






















