மீஞ்சூர், மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாலூர் ஊராட்சியில் அப்பகுதி இளைஞர்களிடம் போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த பிப் 27 ஆம் தேதியன்று கால்பந்தாட்டப் போட்டி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வெற்றிப் பெற்ற வீரர்கள் மற்றும் அணிக்கு பி.எஸ்.பி பொன்னேரி தொகுதி தலைவர் ஏசுதாஸ் பரிசுகளை வழங்கி அவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
நாலூர் ஊராட்சி இந்துஜா நகர் பகுதியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து எச்.எப்.சி நண்பர்கள் குழு நடத்தும் ஐந்து வீரர்கள் பங்கேற்கும் ஒரு நாள் கால்பந்து போட்டி நடைபெற்றது.
இப்போட்டியினை எச்எப்சி குழுவின் நண்பர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள். மேலும், இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 13 போட்டியாளர்கள் கொண்ட குழுவினர் பங்கு கொண்டனர். ஆட்டத்தின் முடிவில் டொகோமோ குழுவினர் வெற்றி பெற்று வின்னர் கோப்பையை தட்டிச் சென்றனர்.
இரண்டாவது இடத்திற்கான ரன்னருக்கான பரிசு மற்றும் சான்றிதழை மேலூர் செலக்ட் குழுவினர் பெற்றனர். மேலும் இப்போட்டியில் வெற்றிப் பெற்ற முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்த அணியினருக்கு, பரிசு தொகையாக முதல் பரிசு அரை சவரன் தங்க நாணயமும், .இரண்டாம் பரிசு கால் சவரன் தங்க நாணயமும் மற்றும் கோப்பைகளையும் சான்றிதழையும் பி.எஸ்.பி கட்சியின் பொறுப்பாளர்களான பொன்னேரி சட்டமன்ற தொகுதி தலைவர் நாலூர் மா. ஏசுதாஸ், தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜோதிராமலிங்கம், தொகுதி அமைப்பாளர் அமரன். சுரேஷ், தொகுதி இளைஞரணி அமைப்பாளர் சத்யா, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் காமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வழங்கினார்கள்.