திருவாரூர், செப். 22 –
குடவாசலில் இன்று கூட்டுறவு தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் ரேஷன் பொருள் கடத்தல் சம்பந்தமாக இதுவரை 11 ஆயிரத்து எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், மேலும் ரூ. 11.31 கோடி மதிப்பிலான அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசலில் சிறிய அளவிலான புதிய நெல் சேமிப்பு கிடங்கு ரூ. 4.75 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதனை இன்று கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தனியார் மயமாக்கப்படும் என்று பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தியாகும், மேலும் நுகர்பொருள் வாணிபக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும், ரேஷன் பொருள் கடத்தல் சம்பந்தமாக இதுவரை 11 ஆயிரத்து எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன மேலும், ரூ. 11.31 கோடி மதிப்பிலான அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் மூன்று மாதங்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்பது போன்ற செய்தி வெறும் வதந்தி என்றும், வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்து வசிப்பவர்களுக்கும் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அப்பேட்டியின் போது அவர் தெரிவித்தார்.