கும்பகோணம், ஜன. 25 –
கும்பகோணம் அருகே வேப்பத்தூர் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரியும் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய கோரியும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பகுதியில் விவசாயிகள் சம்பா நெல் அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நெல்லை விற்பனை செய்வதற்காக அரசு நேரடி கொள்முதல் மையங்களுக்கு கொண்டு வந்து அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் அதனைத் திறக்க கோரியும் ஆன்லைன் முறையை ரத்து செய்து பழைய நடைமுறையே அமல்படுத்தக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மையத்திற்கு பட்டியல் எழுத்தாளர் நியமித்த பிறகு நிலையம் திறக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இப் போராட்டத்தால் இப்பகுதியில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது





















