திருவாரூர், மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
ஓமன் நாட்டில் வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை குற்றம் செய்ததாகக் கூறி அவரை விடுவிக்க வேண்டுமெனில் ரூ.15 லட்சம் பணம் தர வேண்டுமென கேட்டு, அவரின் பெற்றோரிடம் தொலைப் பேசியில் மிரட்டும் அவர் பணிபுரியும் கம்பெனி மேலாளர் எனப் புகார் தெரிவித்து, அவரது பெற்றோர்கள் ஆடியோ ஆதாரங்களோடு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவளித்தார்கள். மேலும் தனது மகனை அங்கிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கண்ணீர்மல்க கேட்டுக்கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்காவிற்கு உட்பட்ட மேலபனங்காட்டாங்குடி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் சேதுராமன் ஐடிஐ தொழிற்பயிற்சி கல்லூரியில் ஆட்டோ மொபைல் பிரிவில் கல்வி பயின்றுள்ளார்.
தமிழகத்தில் தொழிற்சார்ந்த கல்விப் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் சேதுராமன் கடந்த கடந்த ஜூலை மாதம் ஓமன் நாட்டில் உள்ள கம்பெனி ஒன்றில் கார் வாஷிங் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் சேதுராமன் கடந்த 3 ஆம் தேதி பணியில் இருந்த போது வாஷிங் செய்து முடித்த காரை பின்புறமாக எடுத்த பொழுது எதிர்பாராத விதமாக அக்கம்பெனியில் வேலை செய்து வந்த ஒருவர் மீது மோதியது.
அதனை அடிப்படையாக கொண்டு அக்கம்பெனி நிர்வாகம் சேதுராமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளது. மேலும் இத்தகைய சூழலில் சேதுராமன் தாயார் உஷா கடந்த 10 தினங்களுக்கு முன்பு தனது மகனிடம் கைபேசியில் பேசுவதற்காக தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது அக் கம்பெனியில் பணியாற்றி வரும் மேலாளர் ஒருவர் சேதுராமன் கைபேசியில் நடந்த சம்பவத்தை சேதுராமன் தாயார் உஷா மற்றும் அவரது சகோதரர் வசந்தராமன் ஆகியோரிடம் கூறியதோடு, உங்கள் மகனை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.15 லட்சம் தந்தால்தான் விடுவிக்க முடியும் எனவும், மேலும் இந்தியா மாதிரி ஓமன் நாடு கிடையாது எனவும், 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என மிரட்டியுள்ளார்.
அப்போது சேதுராமன் தாயார் எனது மகனிடம் பேசுவதற்காகவது உதவி செய்யுங்கள் என கம்பெனி மேலாளரிடம் கண்ணீர்மல்க கேட்டுள்ளார். அதற்கெல்லாம் அனுமதிக்க முடியாது எனவும் ரூ.15 லட்சம் பணம் தந்தால் மட்டுமே பேச முடியும் என திட்டவட்டமாக தெரிவித்து, உடனடியாக கைபேசி தொடர்பைத் துண்டித்துள்ளதாக அவரது தாயார் தெரிவிக்கின்றார்.
தொடர்ந்து சேதுராமன் குடும்பம் ஓமன் நாட்டின் தனது மகன் வேலைப் பார்த்த அக்கம்பெனியினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது தொடர்பை துண்டித்துள்ளனர்.
அதனால் மனமுடைந்த சேதுராமன் குடும்பத்தினர் எனது மகன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், உடனடியாக இந்திய அரசு அந்நாட்டு தூதரகத்தை தொடர்பு கொண்டு எனது மகன் குறித்த விவரத்தை கண்டறிந்து அவனை மீட்டுத் தர இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
ஆட்சியாளர்கள் அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி வெளிநாட்டு பயணம் என பொதுமக்களின் வரிபணத்தை கோடிக்கணக்கில் விரயம் செய்வதை தவிர்த்து நம்மாநிலத்தில் தொழிற் சார்ந்த கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு அளித்திட உரிய நடவடிக்கை எடுப்பதின் மூலம் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.





















