கும்பகோணம், ஜூலை. 15 –
கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் தேர்பவனி விழா இப்பகுதியில் ஆண்டுதோறும் வெகுச்சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாகும்.
அதன் தொடர்ச்சியாக அவ்வாலயத்தின் 103 ஆம் ஆண்டு தேர் பவனி விழா கடந்த 8 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு, மறைமாவட்ட முதன்மை குரு மரியதாஸ் தலைமையில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றல் நிகழ்ச்சியுடன் இவ்விழா தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் அருட்தந்தையர்களால் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
முன்னதாக அருள் தந்தை ஆரோக்கியாதாஸ் காலை திருப்பலி மற்றும் மறையுரை அருள் செபஸ்தியார் மற்றும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினார்கள். தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத் தேரில் அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆடம்பர தேரில் எழுந்தருள தேர்பவனி வாணவேடிக்கையுடன் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
இத்திருத் தேர் பவனியின் போது, ஒவ்வொரு கிறிஸ்துவ குடும்பத்தினர்ரும், உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாமைகள், குடந்தை அரசன், ஸ்டீபன், சகாயராஜ், ஜான் பீட்டர் ராஜ், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.























