பழவேற்காடு, செப். 28 –
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் ஆதரவற்றோர் இல்லத்திற்காக நிதி சேகரிக்கும் பொருட்டு சாலையில் அமர்ந்து ஷூவுக்கு பாலிஷ் போட்டு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பேராசிரியரின் செயலைக்கண்டு அப்பகுதி வாழ் மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
மேலும் இந்த பேராசிரியர் நான் உங்களின் செருப்பினை துடைக்கிறேன் நீங்கள் ஆதரவற்றோரின் கண்ணீரை துடையுங்கள் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையோடு, கடந்த 18 ஆண்டுகளாக விடுமுறை நாட்களில் இப்பகுதியில் ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காக ஷூக்களுக்கு பாலீஷ் போட்டு வருகின்றார்.
இச்செயல்களில் ஈடுபட்டு வரும் டாக்டர். சிவ. செல்வகுமார் என்ற பேராசிரியர் திருவள்ளூர் மாவட்டம் பாடிய நல்லூர் பகுதியில் வசித்து வருகிறார். மேலும் அவர் கருணைக்கரங்கள் எனும் அமைப்பை உருவாக்கி ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவிடவும், மதர் தெரசா பெயரில் பள்ளி ஒன்றினை துவங்கி 18 ஆண்டுகள் சேவை செய்து வருகிறார்.
இச்செயலை தொடர்ந்து தனது விடுமுறை நாட்களை பயன்படுத்தி ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி கிடைத்திட வேண்டி வீதிகளில் அமர்ந்து செருப்பினை துடைத்து நிதி திரட்டுகிறார். இன்று பழவேற்காடு பஜார் வீதியில் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பேராசிரியருக்கு கோட்டைக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் பேராசியரின் செயற்கரிய தொண்டினை மெச்சி தனது பாராட்டினை தெரிவித்தார். உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஐ.என்.டி.யூ.சி மாநில துணைச் பொது செயலாளர் எம்.பி.தாமோதரன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் சஞ்சய்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் துரைராஜ், தமிழரசன், ஜெயகாந்தன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.