மீஞ்சூர், ஆக. 13 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் யுவராஜ் (54) கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் சென்னை எண்ணூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும் மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான யுவராஜ் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிக்கு செல்லாமல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது,
இதன் காரணமாக குடும்பத்தினர் இவரை ஒதுக்கியதால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தலைமை காவலர் யுவராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென பிளேடால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து அவர் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது கை மணிக்கட்டில் ரத்தம் வழிந்தபடி மயங்கி கிடந்த அவரை அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடி பழக்கத்தால் தலைமை காவலர் ஒருவர் பிளேடால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.