கும்பகோணம், ஜூலை. 10 –
ஆஷாட ஏகாதசியை (ஆனி மாத ஏகாதசி) முன்னிட்டு, தெட்சணபண்டரிபுரம் கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல் பாண்டுரெங்கன் திருக்கோயிலுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆஷாட ஏகாதசி தினத்தில், மகாமக குளக்கரையில் இருந்து வாரகரி எனும் பாத யாத்திரையினை மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இதனிடையே கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தடைபட்டிருந்த இந்த வாரகரி பாதயாத்திரை, இவ்வாண்டு ஆஷாட ஏகாதசி தினமான நேற்று மாலை, கும்பகோணம் மகாமககுளக்கரையில் இருந்து விட்டல் மகராஜ் தலைமையில் தொடங்கியது.
அலங்கார ரதத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பாண்டுரெங்கன், நகரின் வீதிகளில் உலா வர, நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு பஜனை பாடல்களை இசைத்தபடி ஆடி பாடி காவிக்கொடி ஏந்தி செட்டிமண்டபம், அம்மாசத்திரம், திருபுவனம், திருவிடைமருதூர் வழியாக சுமார் 15 கி.மீ தொலைவிற்கு வாரகரி யாத்திரை மேற்கொண்டு, கோவிந்தபுரம் ஸ்ரீ பாண்டுரெங்கன் திருக்கோயிலை சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து நேற்றிரவு ஸ்ரீ ருக்மணி சமேத பாண்டுரெங்கனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.





















