போரூர். ஏப். 22 –
போரூரில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மீது எமதர்மர் வேடமணிந்து பாச கயிற்றை வீசி செல்பி எடுத்து போக்குவரத்து போலீசார் ஏற்படுத்திய நூதன விழிப்புணர்வு பிரச்சாரம். பொதுமக்களை பலரின் கவனத்தை ஈர்த்தது.
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹெல்மெட் அணிவதின் பயன் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போரூர் போக்குவரத்து போலீசார் சார்பில் போரூர் சிக்னலில் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை மடக்கி எமதர்மன் வேடமணிந்த நபர் அவர்கள் மீது பாசக்கயிறை வீசி செல்பி எடுத்து கொள்வதும் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் வரும் குடும்பத்தினருக்கும் பாசக்கயிற்றை வீசி செல்பி எடுப்பது உள்ளிட்ட நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.