சென்னை, பிப். 28 –
உக்ரைனில் உள்ள மாணவர்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது தொடர்பாக இன்று (28-2-2022) ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் முதலமைச்சர் தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் குறித்த விபரங்களை தெரிவித்து அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிட வசதி, பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வதோடு விரைவில் அவர்களை மீட்டுக்கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்றும், இதற்கென தனி அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறதெனவும், விரைவில் அவர்கள் மீட்டுக்கொண்டு வரப்படுவார்கள் எனவும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு உறுதியளித்துள்ளார்.


















