கும்பகோணம், பிப். 7 –
குடந்தை வீரசைவ மடத்தில் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் கலந்துகொண்டு, குடந்தை மாநகராட்சி 48 வார்டுகளில் 29 வார்டுகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தேசிய ஜனநாயக்கூட்டணியில் அதிமுக தொடரும். உள்ளாட்சியில் பாஜகவின் சொந்த பலத்தையும், எங்கள் வேட்பாளர்களின் தலைமை பண்புள்ள வேட்பாளர்களை உருவாக்கிட தனியாக களத்தில் உள்ளோம். மாநிலத்தில் 13 ஆயிரம் வார்டுகள் உள்ளது.
இதில் பெரும்பாலான வார்டுகளில் பாஜக போட்டியிடுகிறது. திருச்சி, கோவை, மதுரை, சென்னை மாநகராட்சியில் 100 சதவீதமும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 90 சதவீதம் பேர் போட்டியிடுகின்றனர்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனியாக போட்டியிட்டபோது வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததை விட, தற்போது மிக அதிகளவில் வேட்பாளர்கள் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளனர். என்றார் அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மௌனமான அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அது பாஜகவிற்கான ஆதரவாக இருக்கும் என்பதை வரும் தேர்தல்கள் நிரூபிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் ஆட்சிக்கு வர திமுகவினர் சொன்ன வாக்குறுதிகள் என்ன? ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் என்னென்ன பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றினார்கள். இப்போது ஆட்சிக்கு வந்து 8 மாதங்களாகியும் என்ன செய்துள்ளார்கள். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்றனர். தற்போது நீட் விலக்கு நடக்காது, நீட் அரசியல் செய்ய முடியாது என்பதால், தமிழக ஆளுனர் மீது குற்றத்தை சுமத்துகின்றனர். இதற்கெல்லாம் ஆளுனர் அச்சப்படுபவர் அல்ல. அவருக்கு என்ன சரியோ அதை தான் செய்வார்.
சமூகநீதி அடிப்படையில் தான் நீட் தேர்வை எதிர்ப்பதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர். அதே சமூக நீதிக்காகத்ததான் ஆளுனர் நீட் விவகாரத்தை திருப்பி அனுப்பி உள்ளார். நடப்பு நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களும், ஏழை மாணவர்களும் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசியல் காரணத்திற்காகத்தான் நீட் தேர்வை திமுகவினர் எதிர்க்கின்றனர்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரார்த்தனை மந்திரத்தில் மகாத்மாகாந்தியை மதிக்கின்றனர். ஆனால் காங்கிரஸ்காரர்கள் மகாத்மா காந்தியை நினைக்கிறார்களோ இல்லையோ, சோனியா காந்தி, ராகுல்காந்தியை தான் நினைக்கிறார்கள். ஆகையால் ஆர்எஸ்எஸ்காரர் தான் காந்தியை சுட்டவர், கொன்றவர் என்று பொய்யான பிரச்சாரத்தை. கொச்சைப்படுத்தும் செயலை நிறுத்தவேண்டும் என்றார்.






















