பெரியபட்டினம், ஆக. 10– ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. 118ம் ஆண்டு மதநல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்றம் நேற்று மாலை நடந்தது.
ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து, மாலை 4:30 மணிக்கு தொடங்கி மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் பெரியபட்டினம் வீதிகளின் வழியாக குதிரைகள், யானை முன்னே செல்ல அலங்கரிக்கப்பட்டதேரில் கொடி ஊர்வலம் மாலை 6 மணிக்குள் நடந்தது. அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்று மவுலீது எனும் புகழ்மாலை ஓதி துஆ செய்தனர். 50 அடி உயரமுள்ள மினராவில் கொடியேற்றம் செய்யப்பட்டது. அச்சமயத்தில் கொடிக்கு மலர்த்தூவி வாழ்த்துக் கோஷங்கள் முழங்கினர். வருகிற ஆக., 18 (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் கலை நிகழ்ச்சிகளும் மறுநாள் ஆக., 19 (திங்கள்கிழமை) அதிகாலை 4 மணியளவில் சந்தனக்கூடு ஊர்வலமும், மக்பராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடக்கும். ஆக., 29 அன்று மாலையில் கொடியிறக்கம் செய்யப்படும். சந்தனக்கூடு விழா கமிட்டி தலைவர் ஹாஜா நஜ்முதீன், துணைத்தலைவர்கள் சிராஜுதீன், சாகுல்ஹமீது, எஸ்.களஞ்சியம்,கே.சாகுல்ஹமீது, விழா அமைப்பாளர் அப்துல் மஜீது, முன்னாள் ஊராட்சித்தலைவர் எம்.எஸ்.கபீர் அம்பலம், அபிபுல்லா, ஹபீப் ரகுமான், ரகீம், தாஹா கான், தொழிலதிபர் சிங்கம் பசீர், இஸ்மாயில் உட்பட பலர் பங்கேற்றனர். பெரியபட்டினம் சுல்தானியா சங்கத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.















