தஞ்சாவூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் திலகர் திடலில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்காத மத்திய – மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழகத்துக்குக் காவிரி நீர் பெற்றுத் தராத தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 8 மாவட்டங்களை சேர்ந்த அதிமுகவினர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,
காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக 50 ஆண்டு காலமாக அதிமுக சட்டப் போராட்டத்தை நடத்தி வந்தது எனவும், மேலும் உச்ச நீதிமன்றம் வரை ஜெயலலிதா சென்று சட்டப் போராட்டத்தை நடத்தினார். எனவும் துரதிருஷ்டவசமாக அவரின் மறைந்தாலும், அவரது எண்ணப்படி உச்ச நீதிமன்றம் மூலம் காவிரி பிரச்னைக்கு அதிமுக அரசு தீர்வு கண்டது என்றார்.
அத்தீர்ப்பை நிலை நிறுத்துவதற்கு அதிமுகவை சார்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாள்களாக போராட்டம் நடத்தியதால், மத்திய அரசு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் அமைப்பையும் அமைத்தது என்றார். மேலும் மத்தியில் காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றனர் எனக் குற்றம் சாட்டினார்.
மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை தருவதற்கு கர்நாடக அரசு மறுக்கிறது. அதை தட்டிக் கேட்க வேண்டிய நிலையில் இருக்கும் திமுக அரசும் அதனை தட்டிக் கேட்காததுடன், நமக்குத் தேவையான நீரையும் பெற்றுத் தரவில்லை என்ற அவர் அப் பாதிப்பால், டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கர் நெற் பயிர்கள் பால் பிடிக்கும் நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் கருகிவிட்டதாக மேலும் குற்றம் சாட்டினார்.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை குறித்த பொருள் இருந்தும் தமிழ்நாட்டு அதிகாரிகள் அதில் கலந்து கொண்டனர். உடனடியாக வெளிநடப்பு செய்யாமல், அவர்கள் அங்கேயே இருந்ததால், அத்தீர்மானம் நிறைவேறியதாகக் கூறி மத்திய நீர் வள ஆணையத்துக்கு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்தது என்றார்.
அதிமுக பெற்றுத் தந்த தீர்ப்பைக் காப்பாற்ற முடியாத அரசாக திமுக அரசு உள்ளது. மேலும் அதில் மத்திய அரசு என்ன செய்யப் போகிறது எனத் தெரியவில்லை. அதை எதிர்த்துதான் தற்போது இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றார். மேலும் மேகதாது அணையைக் கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என தமது வேதனையை தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்தவித நன்மையும் கிடைக்காது எனவும், கோதாவரி காவிரி இணைப்பு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கிடப்பில் போட்டார்கள். மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை, அத்திட்டம் நிறைவேறினால் வறட்சியான புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் பசுமையாக மாறும் என்ற கருத்துரைத்தார். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அத் திட்டம் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தெரிவித்தார்.
விவசாயிகளின் ரத்தத்தை அட்டை போல் இந்த அரசு உறிஞ்சிகிறது. எனவும், மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது தனது ஆதங்கத்தை வெளிப் படுத்தினார்.
மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமானால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்த்து வைப்போம். எனவே, அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து, மிகப் பெரிய மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறியவாறு தனது பேச்சினை நிறைவு செய்தார்.
மேலும் அக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர். காமராஜ், ஓ.எஸ். மணியன், கே.ஏ.ஜெயபால், சி.விஜயபாஸ்கர், என்.ஆர்.சிவபதி, மு.பரஞ்சோதி, எஸ்.வளர்மதி, பி.பெஞ்சமின், பி.வி.ரமணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.