வேளச்சேரி, மார்ச். 09 –
சென்னையில் உள்ள வேளச்சேரியில் வீட்டின் உரிமையாளர் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டினுள் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த 70 சவரன் நகை மற்றும் ரூ 1 லட்சம் பணம் திருட்டு போய் உள்ளது. அச்செயலில் ஈடுப்பட்ட மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சென்னை வேளச்சேரி, வீனஸ்காலனி, 2வது விரிவு தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் (64) இவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு கணவன்-மணைவி இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். வழக்கம்போல் காலையில் தூங்கி எழுந்த நிலையில் பக்கத்து அறை திறந்து கிடந்ததை பார்த்துள்ளனர். உடன் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 70 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி போலீசார் வீட்டு உரிமையார்களிடம் விசாரணை மேற்கொண்டு கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் குழாய் பைப் வழியாக ஏறி மொட்டை மாடிக்கு சென்று, பின்னர் வீட்டுக்குள் புகுந்து இவர்கள் தூங்கும் அறைக்கு பக்கத்து அறையை திறந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 70 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபா ரொக்க பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று இருக்கலாம் என தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். .
மேலும், சீனிவாசன் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை போன வீட்டின் வெளியே பாதுகாப்பிற்காக பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளையும், அந்தப் பகுதியில் பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளையும் ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.