திருவாரூர், டிச. 05 –
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்துள்ள ஜாம்புவானோடையில் உள்ள உலகப் புகழ் பிரசித்தி பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்ஹாவின் 721 ஆம் ஆண்டு சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
இன்று அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில், சந்தனக்கூடு தர்காவை சுற்றி, அம்மா பள்ளிவாசல் சென்று வலம் வந்தது. 40 அடி உயரமுள்ள சந்தனக்கூடு ஜருக கண்ணாடியால் ஜோடிக்கப்பட்டும், பூக்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.
மேலும், முதன்மை தர்கா பாரம்பரிய அறங்காவலர் எஸ்.எஸ். பாக்கர் அலிசாஹிப் தலைமையில் தர்காவை சுற்றி வலம் வந்தது. இதைத் தொடர்ந்து 5 மணி அளவில் ஹக்கீம் ஷெய்குதாவூதுக்கு சந்தனம் பூசப்பட்டது.
இந்நிழ்வில் பங்கேற்க கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்தும் ஜாதி மத வேறுபாடுகளை கடந்து, பல்லாயிரக் கணக்கில் அனைத்து தரப்பு சமூகத்தினரும் வந்திருந்தனர்.
இவ்விழாவினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது. முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து டாஸ்மாக்குகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார்கள் ஈடுப்பட்டு சிறப்பாக செயலாற்றி வருகின்றனர்.
மேலும் இந்நிகழ்வின் தொடர்ச்சியாக வருகின்ற 8.12.2022 அன்று இரவு புனிதக் கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.




















