திருவள்ளூர் செப் 23 :
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
அதன் படி திருவள்ளூர் மாவட்டத்திலும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் இறப்பு, இராஜினாமா செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக மாவட்டத்தில் காலியாக உள்ள 38 பதவிகளுக்கு இடைத் தேர்தல் வருகிற அக்டோபர் 9 ந் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தினமான நேற்று என்பதால் காலியாக உள்ள பூண்டி ஊராட்சி ஒன்றியம் 3 வது வார்டு மாம்பாக்கம் பகுதி ஒன்றிய குழு உறுப்பினராக குமார் என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதையடுத்து இந்த ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 15 ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. கடைசி நாளான நேற்று பூண்டி ஊராட்சி ஒன்றியம் 3-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் எம்எல்ஏ முன்னிலையில் திமுக வேட்பாளர் ஆர்.காண்டீபன் உதவி தேர்தல் அலுவலர் மகேஷ்பாபுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல் அதிமுக கூட்டணி சார்பில் மாவட்ட செயலாளர் சிறுனியம் பி.பலராமன் முன்னிலையில் புரட்சிபாரதம் கட்சி வேட்பாளர் காயத்ரி லட்சுமிகாந்தன் வேட்புமனு தாக்கல் செய்தார். அமமுக சார்பில் செல்லையன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் சுயேட்சையாக 4 பேர் மனுத்தாக்கல் செய்தனர். ஆக மொத்தம் 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்டம் முழுவதும் 38 பதவிகளுக்கு 144 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.