கும்பகோணம், மே. 14 –
கும்பகோணத்தில் நாஞ்சில் சம்பத்து தனியார் நிகழ்ச்சிக்காக வருகை தந்த அவர் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த போது நாஞ்சில் சம்பத்தை பாஜகவினர் முற்றுகையிட சென்றதால் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டது.
கும்பகோணத்தில் திராவிட கொள்கை பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மேடைகளில் யாருக்கும் பயம் கொள்ளாது சரமாரியாக பலரையும் விமர்சிப்பார் இந்நிலையில் சமீப காலமாகவே, மத்திய அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனையும் நாஞ்சில் விமர்சித்து வந்தார்.
அதுவும் பொதுக்கூட்டங்களில், இந்த தலைவர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசி வந்ததாக பாஜகவினர், இவர் மீது கடுமையான கொந்தளிப்பில் இருந்தனர்.
தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று கும்பகோணம் வருகை தந்து தனியார் ஓட்டலில் தங்கியிருந்த தகவலறிந்து பாஜகவினர் நாஞ்சில் சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மாவட்டத் தலைவர் சதீஷ் தலைமையில் ஏராளமான பாஜகவினர் குவிந்து முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து பாஜகவினர் நாஞ்சில் சம்பத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர்.




















