திருவிடைமருதூர், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
திருவிடைமருதூர் மத்தியார்சுனம் என போற்றப்படும் அருள்மிகு திரு மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்ற திருவாடுதுறை ஆதீனம் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
தஞ்ஞைமாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூரில், திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமா முலையம்மன் சமேத மகாலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
மேலும் அத்தலத்தை சுற்றி நான்கு திசைகளிலும் சிவதலங்கள், நான்கு வீதிகளிலும் சிவன் கோயில்களுக்கும் நடுநாயகமாக அத்தலம் அமையப்பட்;டுள்ளதால், அது பஞ்சலிங்கத்தலம் என்ற பெருமை பெற்றதாக விளங்கி வருகிறது. மேலும் அத்தலத்தில் சந்திரன் விநாயக பெருமான், அம்பிகை, அகத்திய முனிவர் உள்ளிட்ட முனிவர்களுக்கும், இறைவன் ஜோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் காட்சியளித்துள்ளார் எனவும் மேலும் வரகுண பாண்டியன் அத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து சென்ற பின்னர் தான் அவருக்கு பிடித்திருந்த பிரமஹத்தி தோஷம் நீங்க பெற்றான் எனவும் அத்தலவரலாறு தெரிவிக்கிறது.
மேலும் அத்தலத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் தனி தனியே ஆடல்வல்லான் மண்டபத்தில் உள்ளது. மேலும் இது காசிக்கு நிகரான தலமாகும் என வரலாறு கூறுகிறது. இத்தலத்தை பட்டினத்தார், அருணகிரிநாதர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட பல அடியார்கள் போற்றி பாடியுள்ளனர் எனவும் முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது பத்திரகிரியார் முத்தி பெற்ற தலமாகும் 1755ம் ஆண்டு முதல் இத்தலத்தில் கார்த்திகை நிறைவு சோமவாரத்தில் லட்ச தீபம் ஏற்றும் வைபவம் நடந்து வருகிறது என்பது வரலாறு அதனை நினைவுபடுத்தும் வகையில் விளக்குடன் கூடிய பாவை சிலை இத்தலத்தில் அமைந்துள்ளது
இத்தகு பல சிறப்புகளை கொண்ட அச்சைவத் திருத்தலத்தில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கமாக நடைப்பெற்று வருகிறது. அதுபோல இவ்வாண்டு இவ்விழா கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9 ஆம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் திருதேரில் எழந்தருள 5 திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தில் திருவாடுதுறை ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமி கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மகாலிங்க மகாலிங்கம் என்று முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.