திருவாரூர், மார்ச். 13 –
திருவாரூர் வட்டம், அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பில் கல்விப் பயிலும் மாணாக்கர்களுக்கான பொது தேர்வு நடைபெற்று வருகிறது. அதனை இன்று மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று ஆய்வு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் அரசின் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி எதிர் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் திருவாரூர் மாட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 6528 மாணவர்களும் மற்றும் 7502 மாணவிகளும் என மொத்தம் 14,030 மாணவ, மாணவிகள் 55 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
இதில், 116 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்கான உதவியாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வுப்பணிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 1,161 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், அரசுத் தேர்வுகள் இயக்குநரால் வழங்கப்பட்டுள்ள வினாத்தாள்கள், 6 கட்டுக்காப்பு மையங்களில் 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை கண்காணிக்க கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் 5 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறையுடன் இணைந்து 89 நிலையான படை அமைக்கப்பட்டு தேர்வுகளில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அவ்வாய்விற்கு பின் தெரிவித்தார்.






















