திருவண்ணாமலை அக்.16-

திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் 6 ம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளன்று மகா தேரோட்டமும் நடைபெறும்.

விழாவின் நிறைவு நாளன்று கோவில் பின் புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். தீபத் திருவிழாவுக்கு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள். ஆனால் கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது எனவே மகா தேரோட்டமும் மாட வீதியுலா உற்சவமும் நடைபெறவில்லை.

மேலும் அண்ணாமலையார் திருக்கோவிலில் பரணி தீபமும் மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. ஆனால் தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கவில்லை. கொரோனா கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் கடந்த ஆண்டு தீபத்திருவிழா நடந்து முடிந்தது. அதோடு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை பவுர்ணமி கிரிவலத்துக்கும் தடை தொடர்கிறது. அதனால் மீண்டும் இயல்பு நிலை திரும்பி கிரிவலம் மற்றும் தீபத் திருவிழாவுக்கு அனுமதி கிடைக்குமா? என பக்தர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 19ந் தேதி மகாதீப பெருவிழா நடைபெறும் ஆனால் இந்த ஆண்டும் தீபத் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா? தேரோட்டம் நடைபெறுமா என்பது கேள்விக் குரியாகவே உள்ளது.

படிப்படியாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் கட்டுப் பாடுகளுடன் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது அதையட்டி தேர் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த இரும்பு தகடுகள் அகற்றப்பட்டன. எனவே தேர்திருவிழாவுக்கு அனுமதி கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாக தரப்பில் கூறுகையில், தேடி வீதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தேர்களை ஆண்டு தோறும் சீரமைத்து பராமரித்தால்தான் தொடர்ந்து அவற்றை பயன்படுத்தும் நிலையில் இருக்கும் தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் மூடிவைத்திருந்தால் தேர் சக்கரங்கள் மரத்தூண்கள் அச்சுப்போன்றவை பாதிப்படையும் எனவே தேர்களை வழங்கம் போல சீரமைக்கிறோம் அரசு அனுமதித்தால் இந்த ஆண்டு தோரோட்டம் நடத்துவதற்கும் கோவில் நிர்வாகம் தயாராகி வருகிறது என்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here