தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
30 தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 176 பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம். வாக்களிப்பதில் உறுதிகொள்ளுங்கள் வாக்களித்து உறுதிப்படுத்துங்கள், என் வாக்கு, என் உரிமை என்பதை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வருவாய்த்துறை அலுவலர்களால் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேரணி நடந்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மணல் குவியலில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள், மீனவர்கள் இணைந்து என் வாக்கு என் உரிமை, காசு பணம் வாங்காமல் கன்னியமாக வாக்களிப்போம் என்பதை முன்னிறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட படகுகளில் வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் கடலுக்குள் சென்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை தங்களது கைகளில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.























