மறைமலைநகர், மே. 11 –
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் பகுதியில், தனியார் நிறுவனப் பயன்பாட்டிற்காக புதியதாக மின்கம்பங்கள் மற்றும்மின்மாற்றிகள் நடும் பணி மின்வாரிய ஊழியர்களால் அப்பகுதியில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அப்பணிக்காக ஜே.சி,பி இயந்திரம் கொண்டு வரப்பட்டு குழி தோண்டும் பணியில் அவ்வூழியர்கள் ஈடுப்பட்டபோது, அப்பகுதியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு, கூடலூர் ஏரியிலிருந்து செல்லும் குடி தண்ணீர் குழாய் உடைந்து பல மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் குடி நீர் வீணாகி சாலையில் குளம் போல் தேங்கி நின்றுள்ளது. மேலும் பணிக்காக சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் மின் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பணியினை மேற் பார்வையிட வந்திருந்த மின் வாரிய உயர் அலுவலரிடம் கடும் வாக்கு வாத த்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் இவ்வாக்குவாதம் குறித்த காணொளிக் காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.