திருவாரூர், டிச. 01 –
திருவாரூர் மருத்துவ கல்லூரியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை மூளை சாவு அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மருத்துவ கல்லூரி முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டது என்பதை விட இப்போதும் குழந்தை சுயநினைவிற்கு வரவில்லை என்பதுதான் சரி எனத் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வெள்ளாங்கால் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் மனைவி வினோதினி (23 ) நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்துக்காக கடந்த நவம்பர் 26 ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு பிரசவவலி ஏற்பட்டு குழந்தை நாடி துடிப்பில்லாமல் பிறந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தை உடலின் நிறம் மாறிவிட்டது. குழந்தை மூளை சாவு அடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பாக திரண்டனர். டாக்டர்கள் கவனக்குறைவால் குழந்தை பாதிக்கப்பட்டதாக தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து குழந்தை தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றபட்டது. இதுகுறித்து மருத்துவகல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, வினோதினி தலைபிரசவத்திற்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது அவரது குழந்தையின் இதயதுடிப்பு குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக குழந்தை சிசேரியன் முறையில் வெளியே எடுக்கப்பட்டதும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
தொடர்ந்து, அவசர சிகிச்சை மற்றும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை வைக்கப்பட்டுள்ளது. இடையில், குழந்தைக்கு வலிப்பும் வந்துள்ளது. முன்னதாக ஸ்கேனில் குழந்தையின் நாடிதுடிப்பு சரியாக இருந்து பின்னர் குறைந்துள்ளது.
அதனால், குழந்தை மூளைச்சாவு அடைந்துவிட்டது என்பதை விட இப்போதும் குழந்தை சுயநினைவிற்கு வரவில்லை, செயற்கை சுவாசத்தில் உள்ளது. குழந்தையின் வளர்ச்சி நன்றாக உள்ளது. தொடர்ந்து இருதய துடிப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கான சிகிச்சையில் இதுவரையிலும் தவறு நிகழ்ந்திருப்பதாக தெரியவில்லை. இருந்தும் விசாரணை தொடர்கிறது. என்றவாறு அவர் தெரிவித்தார்.
பேட்டி ஜோசப்ராஜ் முதல்வர்





















