கும்பகோணம், ஆக. 21 –

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ள மயானத்திற்கு உரிய வழிப்பாதை இல்லாததால், மண்ணியாற்றின் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை கிராம மக்கள் தூக்கிச் சென்ற அவலநிலை இன்று நடந்தேறியது.

நெப்பு கோவில் என்கிற நெய் குப்பை பகுதியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்கள், இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்வதற்கு உரிய வழிப்பாதை இல்லை எனக் கூறப்படுகிறது.

மாயனத்திற்கு உடலை எடுத்து செல்ல வேண்டும் என்றால், அப்பகுதியில் செல்லும் மண்ணியாற்றை கடந்து தான் செல்ல வேண்டும் என்ற நிலை பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது.

மேலும், மண்ணியாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் உடலை தூக்கிக்கொண்டு ஆற்றில் இறங்கி தான் செல்ல வேண்டும். என்ற நிர்பந்தம் உள்ளது. தண்ணீர் இல்லாத நாட்களில் அப்பகுதியை மக்கள் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல எந்த பிரச்சனையும் எழுவதில்லை, இருப்பினும், மழை பெய்து, ஆற்றில் தண்ணீர் செல்லும் போது உடலை எடுத்து செல்வதில் பெரும் சிக்கலை அவ்வூர் மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த மணி என்ற முதியவர் நேற்று இறந்தார். இன்று அவரின் உடலை மயானத்திற்கு நல்லடக்கம் செய்ய எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது மண்ணியாற்றில் தண்ணீர் செல்வதால், அவரது உடலை தகனம் செய்ய அவரது உறவினர்கள் இடுப்பளவு ஆற்று தண்ணீரில் இறங்கி உடலை எடுத்துச் சென்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மயானத்திற்கு உரிய பாதை அமைத்து தர வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இரு கரைகளிலும் உடலை எடுத்து செல்வதற்காக படிகளை கட்டி கொடுத்துள்ளனர்.

ஆனால் ஒரு சிறிய பாலத்தையோ அல்லது மரப்பாலங்களையோ கட்டி கொடுத்து இருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டிருக்காது. ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது இதை விட மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகும்,  இதனால் பெரும் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை மாவட்டம், துறைச்சார்ந்த மற்றும் தமிழக அரசு இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here