கும்பகோணம், பிப். 27 –
கும்பகோணம் அருகேவுள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் காரியசித்தி விநாயகர், அய்யனார் மற்றும் காருண்யேஸ்வரர் ஆகிய மூன்று திருக்கோயில்களும் அமைந்துள்ளது. இதன் மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையும், பெருமையும் வாய்ந்த காரியசித்தி விநாயகர் திருக்கோயில், அய்யனார் திருக்கோயில் மற்றும் புத்ரபாக்கியம் அருளும் காருண்யநாயகி சமேத காருண்யேஸ்வரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களும், உபயதாரர்கள் நன்கொடையுடன் சார்பில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கும்பாபிஷேக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 24 ஆம் தேதி இரவு, முதல் கால யாகசாலை பூஜைகளுடன் இவ் மகா கும்பாபிஷேக ஏற்பாடுகள் தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக இன்று 4 ஆம் கால யாகசாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாஹ_தி, மகா தீபாராதனையும் நடைபெற்று, மங்கல வாத்தியங்கள் முழங்க, கடங்கள் புறப்பாடும், அதனை தொடர்ந்து முதலில், காரியசித்தி விநாயகர், அய்யனார் திருக்கோயில் மற்றும் காருண்யேஸ்வரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களுக்கும் அடுத்தடுத்து மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் அச்சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி மற்றும் கோபுர தரிசனம் செய்து வழிப்பட்டு உளம் மகிழ்ந்தனர்.

























