சென்னை, நவ. 16 –
தொழில் துறை சார்பில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர புதிய ரக வலிமை சிமெண்ட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி அதன் முதல் விற்பனையை இன்று தலைமைச் செயலகத்தில் துவங்கி வைத்தார்.
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆலங்குளம் சிமெண்ட் ஆண்டொன்றுக்கு 2 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன், அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரால் 1970 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தால் அரியலூரில் ஆண்டொன்றுக்கு 5 இலட்சம் மெட்டரிக் டன் உற்பத்தி திறனுடன் ஒரு ஆலையும் 10 இலட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட மற்றொரு புதிய சிமெண்ட் ஆலையும் நிறுவப்பட்டது. இந்த மூன்று ஆலைகளின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டொன்றுக்கு 17 இலட்சம் மெ.டன் ஆகும். தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகம் அரசு என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது.
2021 – 22 ஆம் ஆண்டு தொழில் துறை மானியக் கோரிக்கையின் போது வலிமை என்ற பெயரில் ஒரு புதிய ரக சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சர் ஓர் அறிவிப்பினை வெளியிட்டார்.
அதன்படி தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர வலிமை சிமெண்ட் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய ரக இச் சிமெண்ட் அதிக உறுதியும், விரைவான உலரும் தன்மையும், அதிக வெப்பத்தை தாங்கும் தன்மையும் கொண்டது.
இந் நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு சிமெண்ட்ஸஃ கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனில் மேஷ்ராம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.