திருவண்ணாமலை டிச.10-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலத்துறையில் தமிழக அரசின் சிறப்பு செயலாளர் வ.சம்பத் துறைசார்ந்த ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலத்துறை சிறப்பு செயலாளர் வ.சம்பத் ஆய்வு மேற்கொண்ட அவர் பேசும்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை பணிகளை சிறப்பாக உரிய காலத்தில் வழங்கி முடிக்க செயல்படுத்தவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவிகளுக்கு சீருடை தைக்கும் பணியினை தொய்வில்லாமல் முடிக்க மாவட்ட சமுக நலத்துறை அலுவலருக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் உதவியினை தகுதியின் அடிப்படையில் எவரும் விடுபடாமல் மத்திய கூட்டுறவு வங்கி வழங்கிட வேண்டும். விடுதிகளில் உள்ள பழுதினை ஒதுக்கீடு அடிப்படையில் சீர் செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து முடித்திட வேண்டும் என்றார். பின்னர் கிறித்துவ – முஸ்லிம் மகளிர் சங்க மற்றும் உலமாக்கள் வக்பு போர்டு ஆகியவற்றின் செயல்வாடுகள் குறித்தும் தேவாலயங்கள் பழுதுபார்த்தல் ஜெருசலம் புனித பயணம் போன்றவை குறித்தும் அரசு திட்டமான இலவச தையல் இயந்திரம் இலவச ஸ்திரி பெட்டி ஆகியவற்றை தகுதியின் அடிப்படையில் உரிய காலத்தில் வழங்கவும் ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது. ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் திருவண்ணாமலை வட்டம் மற்றும் நகரத்தில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மகளிர் கல்லூரி விடுதியினை ஆய்வு செய்த அவர் விடுதி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு மாணவிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமி, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சி.கீதாலட்சுமி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.