செங்கல்பட்டு, ஏப். 20 –
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி மீது அரசியல் பழிவாங்கும் வகையில், மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சாலையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சியினர் கையில் கருப்பு கொடியேந்தி ஊர்வலமாக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியை முற்றுகையிட முயன்றனர்.
மேலும், அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்த போலீசார், அவ்வழியாக பேரணியாக வந்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியை முற்றுகையிட முயன்ற போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.