சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. சபரிமலை கோவிலுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார். இங்கு நடைபெறும் மகர விளக்கு பூஜை, மண்டல பூஜை காலங்களில் விரதம் இருந்து மாலை அணிந்து இருமுடி கட்டுடன் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள மூலஸ்தான கதவு பழுதடைந்ததை தொடர்ந்து புதிதாக தங்க கதவு அமைக்க தேவ பிரசன்னம் மூலம் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 4 கிலோ தங்கம் மூலம் புதிய கதவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை கோவில் நடை பங்குனி உத்திர திருவிழாவுக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று சுவாமி ஐயப்பனுக்கு வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது. நடை திறந்த பிறகு புதிய தங்க கதவை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெறும்.

தந்திரி கண்டரரு ராஜீவரு புதிய தங்க கதவை பிரதிஷ்டை செய்து வைக்கிறார்.

முன்னதாக நேற்று இந்த தங்க கதவு கோட்டயம் இடப்பள்ளி ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலில் வைத்து நடிகர் ஜெயராம் தங்க கதவை தரிசனம் செய்தார். திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் இதில் கலந்து கொண்டார்.

நாளை காலை 7 மணிக்கு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 21-ந்தேதி இரவு வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனம் செய்யும் பிரச்சினை நிலவுவதால் அங்கு இந்த முறையும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here