ராமநாதபுரம், ஜூலை 22- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொது மக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப் பட்ட துறை அலுவலர் களை அறி வுறுத்தினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் வருவாய் துறையின் மூலம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத் திறன் கொண்ட ஒரு பயனாளிக்கு மாதந் தோறும் ரூ.1000 உதவி தொகை பெறுவதற்கான ஆணையினையும், பிற்படுத்தபட்டோர் நலத்துறையின் சார்பாக ஒரு பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரத்தினையும் வழங்கினார்.
இக் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளியிருந்து வருகை தந்த மாற்றுத் திறனாளிகள் சிரமப்படாத வகையில் அவர்களுக்கு சிறப்பு அமர்விடம் ஏற்படுத்தப்பட்டு, அவர்களிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக சென்று கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை வழங்கிய அனைவருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் மதிய உணவு பொட்டலத்தை இலவசமாக வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலர் கயல்விழி உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
செய்திகள் தமிழ்நாடு தென்மண்டல தலைமைச் செய்தியாளர் இ.சிவசங்கரன்



















