பொன்னேரி, ஜூன். 24 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலர் காயத்ரி சுப்பிரமணி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பொன்னேரி சுற்று வட்டார விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு குறைகளை முன் வைத்தனர்.
குறிப்பாக ஒட்டு மொத்த விவசாயிகளின் ஒரே குரலாக இதுவரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் போடப்பட்ட கூட்டங்கள் அனைத்திலும் பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்த கோட்டாச்சியர் உடனடி தீர்வாக கூட்டம் நடக்கும் போதே மெதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஏற்பட்ட உரம் தட்டுப்பாட்டை சரி செய்யும் விதத்தில் நடவடிக்கை மேற்கொண்டார்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவர் தக்க பதில் அளிக்காத காரணத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தார்.
இதனால் விவசாயிகள் கோட்டாட்சியர் மீது பெரும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட குறைகளின் மேல் நடவடிக்கை மேற்கொள்ள குறைகள் ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி அதன் மீது அடுத்த கூட்டத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மை மற்றும் உழவர் துறையினருக்கு உத்தரவிட்டார்.
பொன்னேரி கோட்டத்தில் இதுவரை நடந்த விவசாயிகளுக்கான கூட்டத்திலேயே இந்த கூட்டம் சிறப்பாக இருந்ததாகவும் கூட்டத்தை வழி நடத்திய கோட்டாட்சியர் மீது விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கை வந்துள்ளதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவித்தனர்.