சென்னை, டிச. 27 –
கணவனிடம் சண்டையிட்டு அம்மா வீட்டிற்கு சென்ற மனைவியை தனது வீட்டிற்கு திரும்ப வர அழைத்த போது அவர் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன் ஆசையாக தனது மனைவிக்கு வாங்கி கொடுத்த பைக்கை தீ வைத்து எரித்துள்ளார்.
சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் (30) சொந்தமாக அமரர் ஊர்தி வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு சங்கீதா (25) என்ற பெண்ணுடன் கடந்த 7 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. தற்போது அவர்களுக்கு எப்சிபா என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இருவருக்கிடையே கருத்து வேறுப்பாட்டால் அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இது போல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையில் முடிந்ததால் சங்கீதா கோபத்தில் அவருடைய அம்மா வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுள்ளார்.
பலமுறை தொலை பேசியில் மனைவி சங்கீதாவை சத்தியசீலன் அவரது வீட்டிற்கு அழைத்தும் வராததால் நேற்றிரவு பெரும்பாக்கம் வனத்துறை பகுதியில் உள்ள சங்கீதாவின் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மனைவியை தனது வீட்டிற்கு அழைத்ததாகவும் அதற்கு மனைவி கணவருடன் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த சத்தியசீலன் அவர் ஆசை ஆசையாக மனைவிக்கு வாங்கி கொடுத்த பைக் வெளியே நிறுத்தி வைத்திருந்ததை பார்த்துள்ளார். மனைவி தன்னுடன் வர மறுக்கும் நிலையில் தான் மனைவிக்கு ஆசையாக வாங்கி கொடுத்த பைக்கை பார்த்த சத்தியசீலன் ஆத்திரத்தில் தீ வைத்து பைக்கை எரித்துள்ளார். இந்த நிகழ்வுக்குறித்து வழக்குப்பதிவு செய்து பெரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






















