பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் ரங்கம்பேட்டையை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 25) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்திருந்தனர். இவர்களது திருமணம் மார்ச் 10-ந் தேதி நடக்க இருந்தது. ஆனால் பெண்ணுக்கு 18 வயது ஆவதற்குள் திருமணம் செய்வது குற்றமாகும்.
இது குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய சமூக நல அலுவலர் மகாராணி, எருக்கம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் பைரவி ஆகியோர் நேற்று மாலை எருக்கம்பட்டு கிராமத்திற்கு சென்று சிறுமியின் வீட்டில் விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகளை அவர்கள் தடுத்து நிறுத்தி பெற்றோரை எச்சரித்தனர். அதனை தொடர்ந்து சிறுமியை மீட்டு வேலூரில் உள்ள அரசினர் பிற்காப்பு மகளிர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.