கும்பகோணம், ஜன. 23 –
கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதுர்க்கை அம்மன் திருக்கோயில் இத்திருக்கோயிலின் பயன்பாட்டிற்காக ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட ரதத்தினை இன்று இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு துவக்கி வைத்தார்.
தஞ்சைமாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள பட்டீஸ்வரம் நகரில் புகழ் பெற்றதாக திகழும் அருள்மிகு ஸ்ரீதுர்கையம்மன் திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் என்ற பெயருடனும் விளங்கி வருகிறது.
மேலும் இத்திருத்தலத்திற்கு வருகின்ற பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை இத்தலத்தில் உள்ள அம்மன் நிறைவேற்றித்தர அவ்வம்மனுக்கு எலுமிச்சம் பழத்திலான மாலையை அணிவித்தும், நெய்விளக்கேற்றியும், ராகு கால நேரத்தில் வழிபட்டு வருகின்றனர். மேலும் இத்திருக்கோயில் ராகு தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க அருள்மிகு ஸ்ரீதுர்க்கையம்மன் திருத்தலத்திற்காக ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட ரதத்தினை இத்திருத்தலத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர் களின் ஏற்பாட்டின்படி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தங்க ரதத்தில் உற்சவராக அருள்மிகு ஸ்ரீதுர்க்கைஅம்மன் 8 கரங்களுடன் இருப்பதுப்போன்ற ஐம்பொன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரதம் 12 அடி உயரமும், 8 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தங்க ரதம் கோயிலுக்குள் உலா வரும் வகையில் சிறப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்தேரோட்டத்திற்கான முன்னோட்டத்திற்கான நிகழ்ச்சி இன்று இத்திருக்கோயிலில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தங்கத்தேரின் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.
இதில் மாநிலங்களவை உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி செழியன், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், இந்து சம்யம் அறநிலையத் துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் உமாதேவி, செயல் அலுவலர் ஆறுமுகம், கும்பகோணம் மாநகர மேயர் சரவணன், துணை மேயர் சு.ப தமிழழகன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்கேற்று அவருடன் தங்க ரதத்தை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.


























