சென்னை, டிச. 28 –
நேற்று, பெருநகர சென்னை மாநகராட்சி , தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 120 க்கு உட்பட்ட முத்தையால் தெருவில் ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் திட்டப்பணி நடைப்பெற்றது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமைத் தாங்கினார்.
இத்திட்டமானது தேசிய நகர்புற சுகாதார இயக்கம் மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 700.94 ச.மீ பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்படவுள்ளது. மேலும் இத்திட்டப்பணிகள் சுமார் 18 மாத காலத்திற்குள் முடிவுற்று, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மத்திய பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் , மத்திய வட்டார துணை ஆணையாளர் எஸ்.ஷேக் அப்துல் ரகுமான், தலைமைப்பொறியாளர் ( கட்டடம் ) எஸ். காளிமுத்து உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.