மீஞ்சூர், ஏப். 04 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியின் முதல் மாதாந்திர மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். இந்த கூட்டத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் முதல்கட்டமாக வார்டு கவுன்சிலர்கள் அறிமுகம் நடைபெற்றது பின்பு ஒவ்வொரு வார்டு வாரியாக செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 15வது வார்டில் குடிநீர் குழாய் இணைப்புகள் சரி செய்யப்பட வேண்டுமெனவும் புதிய குடிநீர் குழாய் பைப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும், சீமாவரம் ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள சுடுகாட்டிற்கு செல்லக்கூடிய சாலையை சீரமைத்து தரவும், சுடுகாட்டில் எரி மேடையை அமைத்து தருவதற்கும் வார்டு கவுன்சிலர் பரிமளாஅருண்குமார் தீர்மானம் இயற்ற கேட்டுக்கொண்டார்.
2வது வார்டு கவுன்சிலர் அபுபக்கர் மீஞ்சூரில் வாகனங்கள் மூலம் ஏற்றி வரப்படும் சாம்பல் கழிவுகள் கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை விரைவில் சரி செய்ய வேண்டும் எனவும், மீஞ்சூர் பஜார் வீதியில் பொது கழிப்பிடம் அமைத்து தரவும், கழிவுநீர் மேலாண்மை மற்றும் குப்பை மேலாண்மை அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.
இதில் நக்கீரன். ரஜினிகாந்த் .உள்ளிட்ட 17 கவுன்சிலர்கள் மட்டும் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் இளநிலை உதவியாளர் அன்பரசு நன்றி கூறினார்..