கும்பகோணத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நாட்டின் ராணுவ தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கும்பகோணம், டிச. 10 –
கடந்த 8-ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்திய நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்திய இச்சம்பவம் மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. நேற்றைய தினம் ராணுவ வீரர்களின் உடல்கள் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சூலூர் விமான படைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள இந்திய மக்கள் விபத்தில் இழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உச்சி பிள்ளையார் கோவில் காந்தி சிலை முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று முப்படை தளபதி பிபின் ராவத் இழப்பிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் திமுக மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் நகர செயலாளர் தமிழழகன் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் முருகன் நகர செயலாளர் செந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சின்னை பாண்டியன் பார்த்தசாரதி நகர செயலாளர் செந்தில் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.