கும்பகோணம், அக். 06 –
சுவாமிமலை அருகே உள்ள திம்மக்குடியில் கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற சிற்பச்சாலை உள்ளது. அதன் உரிமையாளர் வரதராஜன் ஆவார். இவர் கடந்த 2010ம் ஆண்டு ஐம்பொன் உலோகங்களை கொண்டு ஒற்றை வார்ப்பு முறையில் ஐம்பொன் உலோகங்களை ஊற்றி உலகிலயே மிகப்பெரிய 23 அடி உயரமுள்ள நடராஜர் சிலையை வடிவமைக்கும் பணியினை தொடங்கினார்.
தொடர்ந்து நடைப்பெற்று வந்தப் பணியில் திடீரென நிதி நெருக்கடி ஏற்பட்டு அப்பணி நின்றது. மேலும் அவரின் தொடர் முயற்சியால் கடந்த 2012-ஆம் ஆண்டு வேலுார் நாராயண சக்தி பீடத்தின் ஒத்துழைப்போடு அப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு, தொய்வில்லாமல் 10 ஆண்டுகளுக்கு பிறகு அப் பணி முடிவடைந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த செப்.12ம் தேதி சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நக்கீரன் கோபால் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திரளான பக்தர்கள் என ஏராளாமனோர் இச்சிறப்பு வழிப்பட்டில் பங்கேற்றனர். அவ்விழாவும் மிகச்சிறப்பான முறையில் நடைப்பெற்று முடிவுற்ற நிலையில், ஆனந்த தாண்டவ நடராஜர் சிலைக்கு, இன்று காலை சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பின்னர் பீடம் தனியாகவும், திருவாச்சியுடன் சாமி தனியாகவும் கிரேன் உதவியுடன் பிரிக்கப்பட்டு இன்று மாலை இரண்டு லாரிகள் மூலம் வேலுாருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து உலகத்திலேயே மிகப்பெரிய இச்சிலையினை வடிவமைத்த வரதராஜன் கூறியதாவது; ஆனந்த தாண்டவ நடராஜர் சிலை 23 அடி உயரமும், 17 அடி அகலமும், சுமார் 15 டன் எடையில், ரூபாய் 5 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. என்றார். மேலும், ஆனந்த தாண்டவ நடராஜர் சிலைக்கு இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திம்மங்குடியில் இருந்து நீலத்தநல்லுார், தா.பழூர், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் சாலை வழியாக ஸ்ரீபுரம் (வேலுார்) ஸ்ரீ நாராயணி பீடம் பொற்கோவிலுக்கு நாளை (7ம் தேதி) சென்றடைகிறது. என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆனந்த தாண்டவ நடராஜர் சிலை எடுத்து செல்லும் வாகனத்திற்கு கொடி அசைத்து வேலூர் பொற்கோவிலுக்கு செல்லும் பயணத்தை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் திரளான பக்தர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.