கும்பகோணம், ஜூன். 14 –
கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி காதல் தம்பதியினரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதான இருவரை காவல்துறை போலீசார் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் வரும் ஜூன் 28 தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி அப்போது உத்தரவிட்டுள்ளார்.
சோழபுரம் துலுக்க வெளி கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா இவர் கடந்த 5 தினங்கள் முன்பு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டு கணவருடன் தனது வீட்டிற்கு நேற்று வந்துள்ளார். அவருக்கு விருந்து கொடுப்பதாக வரவழைக்கப்பட்ட சரண்யாவின் சகோதரர் சக்திவேல் மற்றும் அவரது மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும் சேர்ந்து சரண்யா மற்றும் மோகன் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இப் படுக்கொலை சம்பந்தமாக சோழபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சரண்யாவின் சகோதரர் சக்திவேல் மற்றும் அவரது மைத்துனர் ரஞ்சித் குமார் ஆகிய இருவரையும் நேற்றிரவு காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் இருவரையும் இரவோடு இரவாக திருவிடைமருதூர் கொண்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதாக தகவல் தெரிய வருகிறது.
இந்தப் படுகொலை சம்பந்தமாக திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புடன் சக்திவேல் மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் திருவிடைமருதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவ பழனி, முன்பு ஆஜர்படுத்தினர்.
சக்திவேல் ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் வருகின்ற 28ம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் காவலில் வைக்க உத்தரவிட்டார். பலத்த காவல்துறை பாதுகாப்புடன் இருவரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.