தமிழக திருப்பதி, தென்னக திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயில் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
கும்பகோணம், அக். 7 –
கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது இத்தலத்தில் பெருமாள் ஒரே தாயாரான ஸ்ரீ பூமிதேவியுடன் ஒரே சன்னிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இத்தலம் திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியதாகும், இங்கு மூலவர் பெருமாளுக்கு உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் வேறு எந்த வைணத்தலங்களில் இல்லாத வகையில் இங்கு மட்டுமே துலாபாரம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஆண்டு தோறும் புரட்டாசி பெருவிழா 10 தினங்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அது போல இவ்வாண்டும் கொரோனா பெரும் தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி இவ்விழா உற்சவர் பெருமாள் பூமிதேவி தாயாருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, ஸ்ரீ கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற கொடி சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.
தொடர்ந்து கொடிமரத்திற்கும், பெருமாளுக்கும், தாயாருக்கும் தீபாராதனை செய்யப்பட்டது . விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான வருகிற அக்டோபர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டம் பதிலாக தங்கத் தேரோட்டம் பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது. தொடர்ந்து புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. பின்னர் 10ம் நாளான வருகிற அக்டோபர் 16ம் தேதி சனிக்கிழமை மூலவர் சன்னதியில் திருமஞ்சனமும் நண்பகல் அன்னப்பெரும்படையலும் மாலை சப்தாவர்ணம், திருவீதி புறப்பாடு , நடைபெற்று விடையாற்றி திருவீதியுலாவுடன் இவ்வாண்டிற்காண புரட்டாசி பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.