திருவாரூர், பிப். 01 –
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் தெற்கு பார்த்து அமைந்துள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம், ஸ்ரீலஸ்ரீ சிதம்பர சுவாமிகள் மடம் மற்றும் பரிவார மூர்த்திகள் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு இத்திருக்கோயிலில், நான்கு கால யாகசாலை பூஜை சிவாச்சாரியார்களால் செய்யப்பட்டு, மஹா கணபதி ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், ஸ்கந்த ஹோமம், கோபூஜை , லெக்ஷ்மி பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு நிறைவாக மஹா பூர்ணாஹுதி தீபாரதனை நடத்தப்பட்டு கலச புறப்பாடு நடைபெற்றது.
புனித தீர்தங்கள் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து வேத மந்திரங்கள் முழங்க கோவிலை வலம் வந்து, அதனைத்தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் பாலதண்டாயுதபானி சுவாமி ராஜகோபுரம் மற்றும் 35 அடி உயர பத்துமலை முருகன் சிலை உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தினை நடத்தி வைத்தனர்.
அதனை தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடத்தப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
























