கும்பகோணம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நீலத்தநல்லூர் ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று தீ மிதி திருவிழா நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.
நீலத்தநல்லூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மிகவும் பிரசித்து பெற்ற ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 18 நாள்கள் நடைபெறுவது வழக்கம் அது போல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுதடன் நிகழ்ச்சி தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து தினமும் கங்காதேவி திருமணம், அஷ்டவசுக்கள் பிறப்பு, கர்ணன் பிறப்பு, தர்மர் பிறப்பு, அம்மன் பிறப்பு, அர்ச்சுனன் வீர விளையாட்டு, அம்மன் திருக்கல்யாணம், வஸ்திராபுரணம், தவசு மரம் ஏறுதல், பூ எடுத்தல் நாடகம், குறவஞ்சி நாடகம், மற்றும் மாடுவிரட்டு சண்டை, ஸ்ரீ கிருஷ்ணன் தூது, அரவான் புராணம், அரவான் களப்பலி, அபிமன்யு மோட்சம், கர்ணன் மோட்சம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் அவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை கூந்தல் முடி, நடைபெற்ற பிறகு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், உற்சவர் திரௌபதியம்மன், எழுந்தருள, கொள்ளிடம் ஆற்றிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக கரகம் வேலுடன் நாதஸ்வரம், மேள தாளம் ஒலிக்க, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக வந்து, ஆலயம் முன்பு அமைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்ற தீமிதி உற்சவத்தில், கரகம், வேல் மற்றும் பிராத்தனை செய்த ஆண் பெண் பக்தர்கள் என ஏராளமானோர் தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
தீ மிதி திருவிழாவில் பங்கேற்பதற்காக உள்ளூர் மட்டுமல்லாது அவ்வூரைச் சுற்றியுள்ள பல்வேறுக் கிராமங்களிலிருந்து ஏராளமானோர் வருகைத் தந்து விழாவில் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






















