ஆரணி, செப். 09 –
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி தமிழ் காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. கணபதி பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கி நடைபெற்ற இக் கும்பாபிஷேக விழாவில் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களுக்கும் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மனுக்கும் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
மேலும், இக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகர் ஸ்ரீமுருகர் ஸ்ரீ வராகி, ஸ்ரீவைஷ்ணவி ஸ்ரீதாட்சாயணி ஸ்ரீசாமுண்டி ஸ்ரீதுர்க்கை உள்ளிட்ட பரிவார சாமி சிலைகளுக்கும் கலச நீர் கொண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.வி சங்கர் ராஜா உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆரணி நகர செயலாளர் தன்ராஜ் உள்ளிட்ட தமிழ் காலனி கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் புதுவாயல், சிறுவாபுரி, பெரியபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு எல்லையம்மனை தரிசனம் செய்தனர்.