திருவாரூர், ஜூலை. 14 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, சேங்கனூர் கிராமத்தில் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த 11 ஆம் தேதியன்று நடைபெற்றது.
இவ்விழாவினை முன்னிட்டு நான்குகால யாகபூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து அன்றைய தினம் நான்காம் கால பூஜையில் மகாபூர்ணாஹூதியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.
மேலும், மேளதாளங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வளம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க சரியாக 10:00 மணியளவில் விமான கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மகா சக்தி மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடைபெற்று அலங்காரத்துடன் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தற்போதைய மாவட்ட குழு உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன் குடும்பத்தினர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதங்களும், அன்னதானப் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.





















