பெருவயல், மார்ச். 22 –
பெருவயல் டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் வரும் மார்ச் 27 ஆம் தேதி ஞாயிறன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைப்பெறுகிறது. அதற்கான ஆயத்தப்பணிகளை அமைச்சர்கள், எம்எல்ஏ மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குனர் வீரராகவராவ் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி இணைந்து வருகின்ற மார்ச் 27 ஞாயிறன்று டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
முகாமிற்கான ஆயத்த பணிகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் உள்ளிட்டோர் நேற்று திங்களன்று முகாமிற்கான பணிகள் குறித்து நேரில் வருகை தந்து ஆய்வு செய்தனர்.
இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இதில் 6000 பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை பணிக்கு தேர்வு செய்ய உள்ளனர். மேலும், இந்த முகாமில் மாற்று திறனாளிகளுக்கு என தனி அரங்கில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதோடு, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.
வருகின்ற மார்ச்-27 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 3 மணி வரை நடைபெற உள்ள இந்தவேலை வாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்புமுதல் -12 ஆம் வகுப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பி.இ. எம்.பி.ஏ படித்த 18 வயது முதல் 40 வயது வரையிலானவர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குனர் வீரராகவராவ் ஆகியோர் நேரில் வருகை தந்து ஆய்வு செய்தனர். ஆய்வின் போது முகாம் நடைபெறும் அறைகள், முகாமிற்கு வருபவர்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்த அமைச்சர்கள் முகாமை சிறப்பாக நடத்துவது குறித்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், ஒன்றிய துணைசெயலாளர் திருமலை, மாவட்ட கவுன்சிலர்கள் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




















