இராசிபுரம், ஏப். 23 –
ராசிபுரம் கிளை நூலகம் சார்பில் சர்வதேச நூலக தினவிழா சனிக்கிழமையான இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூலக வாசகர் வட்டத் தலைவர் ஆர்.டி.இளங்கோ தலைமை வகித்தார். ராசிபுரம் முதல்நிலை நூலகர் அ.சீனிவாசன் வரவேற்றார். ஒய்வு பெற்ற மாவட்ட ஆட்சியரும், வழக்கறிஞருமான எம்.தங்கவேலு, ராசிபுரம் அரிமா சங்கத் தலைவர் வி.பி,.சுப்பிரமணியம், வாசகர் வட்ட நிர்வாகிகள் கட்டனாச்சம்பட்டி நடேசன், எம்.ராகவன், பி.வேலு உள்ளிட்டோர் பங்கேற்று, வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும், மாணவ மாணவியர் நூலகத்தை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறினார்.
மேலும், இவ்விழாவில் ராசிபுரம் நகர மன்ற தலைவர் ஆர்.கவிதா சங்கர் பங்கேற்று போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள நூலகத்தை பயன்படுத்துவதுடன், நாளிதழ்களை படிப்பதை மாணவ மாணவியர் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார். பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு விழாவில் பரிசுகளும் வழங்கப்பட்டன.