ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணியிலிருந்து சத்தியமங்கலத்துக்கு இன்று காலை அரசு டவுன்பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் பயணிகள், மாணவர்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.
இந்த பஸ் இன்று காலை 9.15 மணியளவில் ஆப்பக்கூடல் அருகே கருப்பகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள ஒருவளைவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே ஒரு மொபட்வந்தது. அதே சமயம் ஒரு நாய் குறுக்கே செல்ல மொபட்டில் சென்றவர் மொபட்டை திருப்பி ஓட்டினார்.
இதைகண்ட பஸ் டிரைவர் மொபட் மீது மோதாமல் இருக்க திருப்பி வளைத்து ஓட்டினார். இதில் மண்பாதையில் சறுக்கிய பஸ் ரோட்டோரபள்ளத்தில் கவிழ்ந்தது.
பஸ் கவிழ்ந்ததும் உள்ளே இருந்த பள்ளி மாணவ- மாணவிகள் பயணிகள் கூக்குரலிட்டனர். இந்த விபத்தில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. இதில் 15 மாணவர்கள் மற்றும் ஒரு பெண் பயணியும் லேசான காயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடி சென்று இடிபாட்டுக்குள் சிக்கிய மணவர்கள்மற்றும் பயணிகளை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.