கும்பகோணம், ஏப். 23 –
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் கீழ பள்ளிவாசல் மற்றும் மேல பள்ளிவாசல் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அன்னை திருமண மண்டபத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜப்ருதீன் மற்றும் ஆசிப் அலி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் இமாம்கள், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், பாஸ்கர், பேரூராட்சி மன்ற தலைவர் கமலா செல்வமணி, துணைத் தலைவர் ரைஹானா பர்வீன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,கோவிலாசேரி பொறுப்பாளர் சுதாகர், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், இதில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்து கொண்டு பேசிய போது தற்போது உலகம் முழுவதும் ரமலான் மாதம் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாதம் முழுவதும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கடுமையாக நோன்பு இருந்து, மிகவும் பக்தியுடன், இறைச் சிந்தனையோடு, தமது தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்ச்சியை எட்டுதல், இறைவனோடு உள்ள பக்தியை வளர்த்து எடுத்தல் மற்றும் இறை வேண்டலில் ஈடுபடுதல் போன்ற ஆன்மீக காரியங்களில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் ஆன்மீகம் – மதவாதம் இரண்டிற்குமான பெரும் வித்தியாசத்தை குறித்தும், சகமனிதர்கள் மீதான அன்பின் வெளிப்பாடு தான் உண்மையான ஆன்மீகம் எனவும் விளக்கினார். வெறுப்பு, காழ்ப்புணர்வு, மோசடி இல்லாமல் இறைபக்தியுடன் வாழ்தலே ஆன்மீகம் எனவும், ரமலான் மாதத்தின் நோன்பு அதற்கான பயிற்சியாகும். என்று தெரிவித்தார். தொடர்ந்து ஜமாத்தார்கள் சார்பில் 200 ஏழை எளிய இஸ்லாமிய மக்களுக்கு 700 ரூபாய் மதிப்புடைய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.




















